கோபத்தில் மேல்- சபையை விட்டு வெளியேறிய மம்தா பானர்ஜி; காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சுக்கு எதிர்ப்பு
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், ரெயில்வே மந்திரியுமான மம்தா பானர்ஜி, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்து உள்ளார்.
மசோதாவை நிறைவேற்றுவது குறித்து கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி எங்களுடைய நம்பிக்கையை பெற தவறிவிட்டது என்று அவர் ஏற்கனவே குற்றம் சாட்டினார்.
இதனால் நேற்று முன்தினம் டெல்லி மேல்-சபையில் அந்த மசோதாவின் மீது ஓட்டெடுப்பு நடந்த போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேரும் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மம்தா பானர்ஜியின் இந்த போக்கு காங்கிரசுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், டெல்லி மேல்-சபையில் நேற்று ரெயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.
பிரவீண் ராஷ்டிரபால், மம்தா பானர்ஜியை மறைமுகமாக தாக்கினார். சில மந்திரிகள் அரசாங்கத்தின் ஒழுங்கு, கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிந்து நடப்பது இல்லை என்றும், மந்திரிசபையில் இடம்பெற்று விட்டால் பிரதமருக்கு கீழ்ப்படிந்து நடப்பதோடு மந்திரிசபை எடுக்கும் முடிவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
பிரவீண் ராஷ்டிரபாலின் இந்த பேச்சு சபையில் இருந்த மம்தா பானர்ஜிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது இருக்கையில் இறுகிய முகத்துடன் திடீரென்று எழுந்த அவர் சபையை விட்டு வேகமாக வெளியேறி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு சென்று அமர்ந்தார்.
அப்போது சபையில் பேசிய பாரதீய ஜனதா மூத்த உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா இதுபற்றி குறிப்பிட்டார். "ஆளும் கட்சி உறுப்பினரின் பேச்சு காரணமாக மம்தா பானர்ஜி கோபம் கொண்டு சபையை விட்டு வெளியேறி மைய மண்டபத்தில் அமர்ந்து இருக்கிறார்.
ரெயில்வே பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் போது அவர் சபையில் இருக்க வேண்டியது அவசியம்'' என்று அவர் கூறினார்.
அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த துணைத்தலைவர் ரகுமான்கான்; இந்த தகவல் மம்தா பானர்ஜிக்கு தெரிவிக்கப்படும் என்றார். தைத்தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு பிறகு மம்தா பானர்ஜி மீண்டும் சபைக்குள் வந்தார்.
மம்தா பானர்ஜி நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து 45 நிமிடம் பேசினார். அப்போது, மகளிர் மசோதா பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலையை விளக்கி கூறினார்.



del.icio.us
Digg
