பிரபாகரனை தேடும் தமிழ் அமைப்புகள்: இலங்கை அதிர்ச்சி

Font size: Decrease font Enlarge font
image

இலங்கையில் ராணுவத்துடன் விடுதலைப்புலிகள் நடத்திய போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் தமிழ் அமைப்புகள் இதை ஏற்கவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். திடீர் என்று மக்கள் முன் தோற்றுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
 
இதற்கிடையே பிரபாகரனை தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது.
 
இந்திய வெளியுறவு துறைச் செயலாளர் நிருபமா ராவுடனான சந்திப்பின் போது இலங்கை வெளி விவகார மந்திரி ரோஹித் போகொல்லாகம இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
 
விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகள் சில தங்கள் தலைவர் பிரபாகரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து இலங்கை அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
 
இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். எங்களது கவலையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளோம். இலங்கை தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வோம்.
 
நிருபமா ராவுடனான சந்திப்பின் போது, பயங்கர வாதம், சர்வதேச ரீதியிலான விடுதலைப்புலிகள் முன்னணி அமைப்புகள் குறித்தும் நாங்கள் கொண்டுள்ள கவலையை தெரியப்படுத்தினோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கடந்த 2 மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் இலங்கையின் வடக்கு பகுதிக்கு சென்று வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
 
ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டு, உள் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உள்பட வடக்கு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்று வந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது அங்குள்ள வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என கூறப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement