இந்தியாவில் அல்கொய்தா தாக்குதல் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

Font size: Decrease font Enlarge font
image

பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் அவர்கள் இதுவரை எந்த தாக்குதலிலும் ஈடுபட்டது இல்லை. ஆனாலும் சமீப காலங்களில் அல்கொய்தா இயக்கத்தில் 3-ம் நிலை தலைவர்கள் சிலர் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்து வருகின்றனர்.
 
அல்கொய்தா உண்மையிலேயே இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இருக்கிறதா? இல்லையா? என்பது தெளிவாக தெரிய வில்லை.
 
இந்த நிலையில் அல்கொய்தா அடுத்த கட்டமாக இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தில் இருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. டைரக்டர் லியோன் டெனட்டா கூறியுள்ளார்.
 
அமெரிக்க ஒல்காமோ பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பேசும் போது அவர் இந்த தகவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
 
மற்ற நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும் முன்கூட்டியே எச்சரிக்கும் முக்கிய பணியையும் சி.ஐ.ஏ. மேற்கொண்டு உள்ளது. அதன்படி நமக்கு கிடைக்கும் தகவல்களை மற்ற நாடுகளுடன் அவ்வப் போது பரிமாறிக் கொள்கிறோம்.
 
அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியா-பிரேசில் நாடுகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் உள்ளனர். இதை தடுக்க இந்தியாவும் - அமெரிக்காவும் புலனாய்வு ரீதியில் மிகுந்த ஒத்துழைப்புடன் இருப்பது அவசியம் என கருதுகிறோம்.
 
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்படும் அல்கொய்தா - தலிபான் தீவிரவாதிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறோம்.
 
அவர்களுக்கு எதிரான வேட்டை சிறப்பான முறையில் உள்ளது. இந்த இயக்கங்களின் தலைவர்கள் சிக்கலில் தவிக்கிறார்கள். அவர்களின் தொடர்புகளையும் நசுக்கி இருக்கிறோம். அல்கொய்தா தீவிரவாதிகள் பலரை கைது செய்வதற்கு பாகிஸ்தான் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உள்ளது.
 
அல்கொய்தா இப்போது தனது பல்வேறு திட்டங்களை வேறு மாதிரி மாற்றியுள்ளது. அமெரிக்காவில் ஏதேனும் புதிய முறையில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement