13-ந்தேதி கோலாகல தொடக்க விழா: போலீஸ் கட்டுப்பாட்டில் புதிய சட்டசபை வளாகம்; மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் வந்தனர்
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 450 கோடி மதிப்பில் புதிய சட்டசபை கட்டிடம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் விரைந்த நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தினமும் வந்து பணிகளை கண்காணித்து முடுக்கி விட்டுள்ளார்.
புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா வருகிற 13-ந்தேதி மாலையில் கோலா கலமாக நடைபெறுகிறது. இதற்காக புதிய சட்டசபை போல பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது.
புதிய சட்டசபை வளாகம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மத்திய சென்னை இணை கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில், துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார்கள். திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் டெல்லி மேலிட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களின் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.
பின்னர் அவர்கள் புதிய சட்டசபை வளாகம் மற்றும் விழா நடைபெறும் பிரமாண்ட மேடையை பார்வையிட்டனர். பாதுகாப்பு குறித்து சென்னை உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.
மேலும் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது மட்டுமல்ல சென்னை மாநகர போலீசார் 5 ஆயிரம் பேரும் தீவிர கண்காணிக்கின்றனர்.



del.icio.us
Digg
