சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை
பொதுப் பள்ளிக்கான மாநில அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தலைவர் கனகசுந்தரம், செயல் இயக்குனர் முனைவர் ரத்தின சபாபதி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமச்சீர் கல்வி 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க கடந்த செப்டம்பர் மாதம் குழு அமைக்கப்பட்டு அக்டோபர் மாதமே வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.
இவ்வளவு வேகம் தேவையில்லை என்று நாங்கள் தெரிவித்தபோது, அரசு தரப்பில் அவசரமாக பாடத்திட்டத்தை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மே மாதமே பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பாட நூல்களை முதல்வர் ஆய்வு செய்து திருத்தங்களை கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் புத்தகங்கள் இதுவரை அச்சுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது.
இந்த குழப்பத்தை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. தங்களது பாடத்திட்டம்தான் உயர்ந்த பாடத்திட்டம் என்று பெற்றோர்களிடம் பரப்பவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவுக்கு பெற்றோர்கள் தள்ளப்படும் நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாடப்புத்தகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



del.icio.us
Digg
