தமிழ்ப் பகுதிக் காணிகளின் உரிமையின் எதிர்காலம்......
விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிங்களவர்களால் விற்கப்பட்ட காணிகளின் உரிமைகள் ரத்துச் செய்யப்பட வேண்டும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள், அச்சம் காரணமாகத் தமது காணிகளை விற்றுவிட்டுப் போய்விட்டனர். இப்போது அந்த நிலங்களின் உரிமையை ரத்துச் செய்துவிட்டு, அவற்றை அரசாங்கம் கையேற்க வேண்டும்.
இவ்வாறு அரசாங்கத்திற்கு, அதன் அருமைத் தோழமைக் கட்சியின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இலங்கைத் தேசியத்தின் சொந்தக்காரக் கட்சியின் தலைவர் வண.எல்லாவல மேத்தானந்த தேரர் ஆலோ சனை (அல்லது சிபார்சு என்று கூடச் சொல்லலாம்) வழங்கியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள சகல நிலப்பகுதிகளையும் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் உள்ள சகல நிலப்பகுதிகளையும் அவசரகாலச் சட்டத்தின்கீழ் அரசின் உரிமையாக்கும் திட்டம் குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் கூறியது.
மேற்குறிப்பிட்ட இரண்டையும் அதாவது ஜாதிக ஹெல உறுமயவின் யோசனையையும் அரசாங்கத் தரப்பின் உத்தேசத்தையும் பொருத்திப் பார்த்தால் உள்ளூர ஒரு பெரும் சதிவலைப் பின்னல் உருவாகி வருகிறதோ என்று ஊகிக்க வைக்கிறது.
தமிழர்கள் தமக்கென்று ஒரு தாயகப் பகுதி உண்டு என்று உரிமை கொண்டாடாமல் செய்துவிடவேண்டும் என்ற பேரினவாதம் பரகசியமாக அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான முத்தாய்ப்புக்களே, மேலேசுட்டிக்காட்டப்பட்ட ஆலோசனையும் திட்டமும் இரண்டுமாகும் என்பது புலப்படுகிறது.
தமிழர்களை இந்த நாட்டின் சம பிரஜைகளாக சம உரிமை உள்ள பிரஜைகளாக வைத்திருக்காமல் செயல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற பேரினவாதத்தின் மூளையம் பெரும்பான்மைச் சமூகத்தினரிடம் இன்று நேற்றுக் கருக்கொண்டதல்ல. இலங்கைக்குப் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே அது முளை விட்டு, இலை வந்து, கிளை பரப்பி, மரமாகி, பெரு விருட்சமாகி நிற்பது விவரித்து விளக்க வேண்டிய ஒன்றல்ல.
அது மீண்டும் ஒரு மலர்ச்சி காணப் போகிறது என்பதற்கான முகிழ்ப்பாகவே ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட இரண்டும் அமைகின்றன.
1983 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் கொழுந்து விட்டு எரிந்த இனக் கலவரத்தின் இன அழிப்பின் பின்னர், சிங்கள மக்களுடன் சகோதரர்களாக வாழ்ந்த தமிழர் அழிப்பில் இருந்து எஞ்சிய தமது சொத்துகளையும் வர்த்தக நிலையங்களையும், நிலங்களையும் சொற்ப பணத்துக்கு விற்றுவிட்டுத் தமிழ்ப் பகுதிகளுக்குத் திரும்பினார்கள். ஆனால் நிலைமை சீரான பின்னர் அவை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டனவா? நியாயமான விலை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? இல்லையே.... இப்போது.....
தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழர்களுக்கு விற்றுவிட்டுச் சென்ற காணிகளின் உரிமைகளை ரத்துச் செய்துவிட்டு அரசு கையேற்க வேண்டும் என்று கூறப்படுவதில் சமன்பாடு எதுவும் உண்டா?
அதேபோன்று, போரிலிருந்து தப்பி தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் அகதி முகாம்களில் போய்த் தஞ்சம் அடைந்து அவலப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட வன்னி மக்களின் நிலங்களை அரசாங்கம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுவீகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களும் உள்நோக்கம் ஒன்றுடன், வன்னிப் பகுதியைத் தமிழர் பிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான உள்நோக்கம் கொண்ட சூழ்ச்சியுடன் முன்வைக்கப்படும் திட்டம் என்றே தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
மேற்படி மூன்று மாவட்டங்களிலும் உள்ள காணிகளுக்கு அந்தந்த மாவட்டக் காணிப் பதிவகத்தில் உரிய ஆவணங்கள் பேணப்பட்டன. அவற்றின் பிரதிகள் கொழும்பில் உள்ள இலங்கை முழுவதற்குமான தலைமைக் காணிப் பதிவகத்தில் இருக்கும். அவ்வாறிருக்க அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலங்களை மற்றொருவர் அபகரித்து வைத்து உரிமை கொண்டாட வாய்ப்பில்லையே!
அவ்வாறெனின் காணிச் சொந்தக்காரர்களுக்கு உதவும் பொருட்டே மூன்று மாவட்டங்களிலும் உள்ள தனியார் காணிகளை நிலங்களை அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற திட்டம் எதற்கு?
இதிலும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கொள்ளமுடியுமா? கூறமுடியுமா?
தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற குரல், போர் ஓய்ந்த பின்னர், சர்வதே சரீதியாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில்
இப்போதைக்கு வேண்டாத மேற்கூறிய செயற்பாடுகள் அவசியம் தானா? சிவபூசைக்குள் கரடி உட்புகும் கதை ஆரம்பமாகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே இந்தச் செயற்பாடுகளைக் கொள்ளலாம். வேறெப்படிக் கூறுவது....!



del.icio.us
Digg